மகிந்த அரசில் இருந்த நால்வரின் பெயரில் டுபாய் வங்கியில் 2 பில்லியன் டொலர் பதுக்கல்
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்தவர்களால், 2 பில்லியன் டொலருக்கும் அதிகமான கறுப்புப் பணம், டுபாயில் உள்ள வங்கிக் கணக்குகளில் இரகசியமாக வைப்பிலிடப்பட்டுள்ளதாக, விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவிக்குபு வந்த பின்னர், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்தே இது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னணி அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருரின் பெயரில், டுபாய் வங்கியில், 1.064 பில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரில் உள்ள இன்னொரு வங்கிக் கணக்கில், 500 மில்லியன் டொலர் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மிக முக்கியமான பிரமுகரின் செயலர் 500 மில்லியன் டொலரை, ஊழலில் பெயர்போன மற்றொருவருடன் இணைந்து டுபாய் வங்கில், வைப்பில் இட்டுள்ளார்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் டுபாய் வங்கியில் பெருமளவு பணத்தை வைப்பிலிட்டுள்ள முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களின் பெயர்களை அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிடவில்லை.
“இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 600 மில்லியன் டொலர் பணம் மீளப் பெறப்பட்டுள்ளதும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விபரங்களை அமெரிக்க மற்றும் இந்தியநிதிப் புலனாய்வு முகவர் அமைப்புகளுக்கும் வழங்கியுள்ளோம். அவர்களும் எமது விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.
அதேவேளை, முன்னைய அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கு நெருக்கமானவர்களால், வெளிநாடுகளில் 10 பில்லியன் டொலர் வரை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.