அத்துமீறும் எவர் மீதும் சுடும் அதிகாரம் கடற்படைக்கு உள்ளது – மீண்டும் சர்ச்சையைக் கிளப்புகிறார் ரணில்
சிறிலங்காவின் கடற்பரப்புக்குள் அத்துமீறும், இந்திய மீனவர்களைச் சுடும் உரிமை சிறிலங்காவுக்கு உள்ளது என்று, மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
அண்மையில் தந்தி தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ரணில் விக்கிரமசிங்க இதே கருத்தை கூறியிருந்தார். இது இந்தியாவில் பரலவலான கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்துக்கு சில நாட்கள் முன்னதாக இந்த சர்ச்சைக்குரிய செவ்வி வெளியான நிலையில், இது மோடியின் பயணத்தின் போது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் கருதப்பட்டது.
இந்தநிலையில், மோடியின் பயணம் நிறைவுற்ற பின்னர், இந்தியாவின் என்டிரிவி தொலைக்காட்சியிடமும் அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ரணில் விக்கிரமசிங்க.
“மீனவர்களின் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான பணிகளில் இந்தியாவும் சிறிலங்காவும் ஈடுபட்டிருந்தாலும், சிறிவலங்காவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் எவரையும் சுடும் அதிகாரம் சிறிலங்கா கடற்படைக்கு உள்ளது.
நாட்டின் எந்தப் பகுதியிலும், எவரேனும் சிறிலங்காவின் கடல் எல்லைக்குள் நுழைந்தால் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தும் உரிமை சிறிலங்கா கடற்படைக்கு உள்ளது. இது ஒன்றும் புதிய விடயமல்ல.
முக்கியமான விவகாரம், இழுவைப் படகுகள் தான். இநைத மீன்பிடி நிறுத்தப்பட வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.