மோடியின் ஆலோசனை சிறிலங்காவுக்குப் புரிந்திருக்கும் – வெங்கய்ய நாயுடு நம்பிக்கை
13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கு அப்பால் சென்று தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய ஆலோசனையை சிறிலங்காவின் புதிய அரசாங்கம் ஏற்றுச் செயற்படும் என்று இந்தியாவின் மத்திய இணைஅமைச்சர் வெங்கய்ய நாயுடு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
“சிறிலங்காப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 1987ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இந்திய – சிறிலங்கா உடன்பாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைய, தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
அது தான் நரேந்திர மோடி கொடுத்த ஆலோசனை. அந்த ஆலோசனையை சிறிலங்கா புரிந்து கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.
அதன் பின்னர், இலங்கைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கி நகர முயற்சிக்கலாம்.
சிறிலங்காவின் அரசியலமைப்புக்குட்பட்ட வகையில், சிறிலங்காவின் ஒருமைப்பாட்டுக்குள் விரைவான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே பாஜகவின் நிலைப்பாடு.
ஆனால், அதேசமயம், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிலையான அமைதியான தீர்வைக் காண்பதற்கு நல்லிணக்கமும், அதிகாரப்பகிர்வும் அவசியமானதாகும்.
மோடியின் சிறிலங்கா பயணம் வரலாற்று ரீதியானது. அயல்நாட்டில், அமைதியையும், பதற்றமற்ற நிலையையும், இந்தியா விரும்புகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.