அனைத்துலக விசாரணைக்கு எதிராக சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்கிறதாம் – சந்திரிகா கூறுகிறார்
சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டுப் போரில், இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த அனைத்துலக விசாரணைகளுக்கு எதிராக, சிறிலங்கா முழுவதும் ஒன்றுபட்டு நிற்பதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
டுபாயில் நடைபெறும் கல்வி தொடர்பான அனைத்துலக கருத்தரங்கில் பங்கேற்றுள்ள அவர், பிரித்தானியாவின் ஐபி ரைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.
“ஐ.நா தலைமையிலான அனைத்துலக விசாரணைக்கான அழைப்பை, சிறிலங்கா மக்களும், அரசியல்வாதிகளும் அவமானமாக கருதுகின்றனர்.
தொழில்நுட்ப உதவிகளை வழங்குமாறு ஐ.நாவிடம் சிறிலங்கா கோரியுள்ளது.ஆனால், விசாரணை உள்நாட்டு மட்டத்திலேயே இடம்பெறும்.
ஒட்டுமொத்த நாடுமே, அனைத்துலக விசாரணையை தேவையற்றதாக கருதுகிறது.
ஏனென்றால், இது, வெளிப்படையான விசாரணை ஒன்றை எம்மால் சொந்தமாக நடத்த முடியாது என்று, சிறிலங்கா அரசாங்கத்தை இழிவுபடுத்துவதாக இருக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.