இந்தியாவின் தலையீடுகளை சகித்துக் கொள்ள முடியாது – முன்னாள் அமைச்சர் கூறுகிறார்
இந்திய ஆதிக்க விரிவாக்கத்தை எதிர்த்தமையே முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதற்கான காரணம் என்று, முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும், அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டை முன்னைய அரசாங்கம் எதிர்த்தது. நாட்டின் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணமுடியும் என்று அது நம்பியது.
பிராந்தியத்தின் பெரிய அண்ணனின் கைப்பாவையாக இல்லாமல், எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்வோம் என்று நாம் செயற்பட்டோம்.
அதற்காக சீனாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்தியிருந்தோம். அதற்காக நாம் அரச அதிகாரத்தை விலையாக கொடுக்க நேரிட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை நாம் வரவேற்கிறோம். இந்திய- சிறிலங்கா உறவுகளைக் கட்டியெழுப்புவதில் அவர் கொண்டுள்ள அர்ப்பணிப்பை மதிக்கிறோம்.
ஆனால்,எமது உள்நாட்டு விவகாரத்தில் இந்தியாவின் தலையீடுகளை எம்மால் சகித்துக் கொள்ள முடியாது.
முன்னைய அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை சமநிலையில் இருந்திருக்க வேண்டும். இப்போதைய அரசாங்கம் அதற்கு எதிர்மாறாகவே செயற்படுகிறது.
இதன் விளைவுகளை தெரிந்து கொள்வதற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும்.
இந்தியாவுக்கு அடிமையாக இருப்பது, சிறிலங்காவில் மேலும் பல பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.