தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இன்றுமாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் இந்தியப் பிரதமருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், இந்தியத் தூதுவர் வை.கே.சின்கா, ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கொழும்பில் உள்ள தாஜ் சமுதிரா விடுதியில் மாலை 6.15 மணியளவில் தொடங்கிய இந்தச் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, மாகாணங்களுக்கு அதிக அதிகாரங்களை வழங்கக் கூடிய ”ஒத்துழைப்புடனான சமஷ்டியே” (cooperative federalism) சிறிலங்காவில் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வைத் தர முடியும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.