தேசிய நல்லிணக்க முயற்சிக்கு பிரித்தானிய பிரதமரிடம் உதவி கோரவுள்ளார் மைத்திரி
போருக்குப் பிந்திய தேசிய நல்லிணக்க முயற்சிகளுக்கு, பிரித்தானியாவில் உள்ள செல்வாக்குப் பெற்ற புலம்பெயர் தமிழ் அமைப்புகளை ஆதரவை திரட்டுவதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசாங்கமும், பிரித்தானியாவின் உதவியைக் கோரவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது பிரித்தானியா சென்றுள்ள, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடன் நடத்தவுள்ள பேச்சுக்களின் போது, புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் ஆதரவை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவுள்ளனர்.
இந்தச் சந்திப்பு நாளை இலக்கம் 10, டவுணிங் வீதியில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா அதிபர் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 21வது குழு அறையில் நடக்கவுள்ள, அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்கவுள்ளார்.
இதற்கிடையே நேற்று காலை லண்டன் வந்தடைந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா குழுவினர், பாக் வீதியில் உள்ள லண்டன் ஹில்டன் விடுதியில் தங்கியுள்ளனர்.
அங்கு அவர்களுக்கான பாதுகாப்பை பிரித்தானிய அதிகாரிகள் அதிகரித்துள்ளனர்.