சீனாவின் செல்வாக்கை முறியடிக்க சிறிலங்காவுக்கு உதவிகளை அள்ளி வழங்கவுள்ளார் மோடி
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் சிறிலங்கா உள்ளிட்ட நான்கு தீவுகளுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளைப் பெருமளவில் வழங்கவுள்ளார்.
இந்திய அரசாங்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி, ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் உள்ள சிறிலங்கா, மொறிசியஸ், சிஷெல்ஸ், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கு அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, இந்தப் பிராந்தியத்தில் பில்லியன் கணக்கான ரூபாவைச் செலவிட்டு சீனா பெற்றுள்ள செல்வாக்கை உடைப்பதற்காக, இந்தியப் பிரதமர் பரந்தளவிலான இராணுவ மற்றும் பொதுமக்களுக்கான உதவித் திட்டங்களை வழங்கவுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
சிறிலங்காவில் சீனா, துறைமுகங்கள், மின் நிலையங்கள், நெடுஞ்சாலைகள், போன்றவற்றை அமைத்துக் கொடுத்துள்ளது.
கடந்த ஆண்டு சிறிலங்காவில் தனது நீர்மூழ்கிகளை தரிக்கச் செய்ததன் மூலம், சீனக் கடற்படையும் இந்தியப் பெருங்கடலில் திடீரென நுழைந்துள்ளது.
இந்தநிலையில், இந்தியப் பிரதமர் பயணம் செய்யவுள்ள நான்கு தீவுகளுடனும், நெருக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று இந்திய அரசாங்கம் நம்புவதாக, இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு வழங்குனராக இந்தியா பங்காற்றுவதாக, வரும் மார்ச் 10ம் நாள் ஆரம்பமாகவுள்ள இந்தியப் பிரதமரின் பயண ஏற்பாடுகளை கவனிக்கும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ரோந்துக் கப்பல்கள், கண்காணிப்பு ரேடர்கள், போன்றவற்றை இந்த தீவு நாடுகளுக்கு வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.
மோடியின் பயணத் திட்டத்தில் உச்சமாக இருப்பது சிறிலங்கா தான்.
பீஜிங்கின் தலையீடுகள் அதிகரிப்பது குறித்த கவலையை ஏற்படுத்தியிருந்த முன்னைய அரசாங்கத்தினால் சீனாவுக்கு வழங்கப்பட்ட, உட்கட்டமைப்புத் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்து வருகிறது.
அத்துடன் எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிகளின் வருகையையும், நிராகரித்து விட்டது.
இந்தநிலையில், சிறிலங்காவுடன் இறுக்கமான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்தவும், 2012ம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், திருகோணமலையில், 500 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை, கட்டுவதற்கான இறுதி ஒப்புதலைப் பெறுவதையும், மோடி எதிர்பார்ப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இருதரப்பும் இராணுவப் பயிற்சிகளை தரமுயர்த்துவது குறித்த பேச்சுக்களையும் நடத்தி வருவதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.