‘இரகசியத் தடுப்பு முகாம்கள் இல்லை’ – மகிந்த பாணியில் கைவிரித்தார் ரணில்
சிறிலங்காவில் இரகசியத் தடுப்பு முகாம்கள் எவையும் இல்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ருக்மலி சிறி தர்மலோக விஜயலோக மகாவிகாரையில், பௌத்த பிக்குகளுடன் நடத்திய உரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழ் இளைஞர்கள் இரகசியத் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சட்டரீதியான தடுப்பு நிலையங்களுக்கே கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் விபரங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளன.
இரகசியத் தடுப்பு முகாம்கள் தொடர்பாக சிலர் வெளியிடும் அச்சத்தைப் போக்குவதற்காக, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரது பட்டியல் ஒன்றையும் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காணாமற்போனவர்கள் ஒருவேளை போரில் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளில் வாழலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.