நீர்மூழ்கிகள் தரித்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் – சிறிலங்காவிடம் எதிர்பார்க்கிறது சீனா
சீன நீர்மூழ்கிகள் சிறிலங்காவில் தரித்துச் செல்வதற்கு புதிய அரசாங்கம் அனுமதி அளிக்கும் என்று சீனா எதிர்பார்ப்பதாக, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சீன நீர்மூழ்கிகள் இனிமேல் சிறிலங்கா எல்லைக்குள் நுழைய இனிமேல் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பீஜிங்கில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து இன்று பீஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுங்யிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், சீன நீர்மூழ்கி ஏடன் வளைகுடாவில் சோமாலிய கடற்கொள்ளையருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடச் சென்ற போதே, வழியில் விநியோகத் தேவைக்காக சிறிலங்காவில் தரித்து நின்றதாக, கடந்த ஆண்டு சீன இராணுவம் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டி கருத்து வெளியிட்டார்.
“இவை வழக்கமான, வெளிப்படையான செயற்பாடுகள். அனைத்துலக நடைமுறைகளே இதன்போது பின்பற்றப்பட்டுள்ளன.
சீனா உள்ளிட்ட நாடுகளின் நீர்மூழ்கிகளை தரித்துச் செல்வதை சிறிலங்கா வரவேற்கும் என்று சீனா எதிர்பார்க்கிறது.
சிறிலங்காவின் தரப்பில் இருந்து முன்கூட்டியே ஒப்புதல் பெற்றிருந்தோம்.
கடற்கொள்ளைக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் கொள்கையை சிறிலங்கா கொண்டிருக்கிறது என்று நான் அறிவேன்.
அந்த நோக்கத்துக்காக நட்புநாடுகளின் நீர்மூழ்கிகள் தரித்துச் செல்வதை சிறிலங்கா வரவேற்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.