விசாரணை அறிக்கை இனிமேல் பிற்போடப்படாது – விக்னேஸ்வரனுக்கு ஐ.நா வாக்குறுதி
சிறிலங்காவில் நடந்த போர் குறித்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை வரும் செப்ரெம்பர் மாதம் கண்டிப்பாக வெளியிடப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் ஐ.நா உறுதியளித்துள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின், அரசியல் விவகாரங்களுக்கான செயலர் ஜெப்ரி பெல்ட்மன், இன்று யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தற்போதைய அமர்வில், சிறிலங்கா குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படாமல் பிற்போடப்பட்டது குறித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்மக்களின் ஏமாற்றத்தையும் கவலையையும் வெளியிட்டார்.
இதற்குப் பதிலளித்த, ஐ.நா பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மன், மனித உரிமை விவகாரங்களைத் தீர்க்க சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கை வெளியிடப்படுவது இரண்டாவது முறையாகவும் பிற்போடப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, வடக்கு மாகாணசபையால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்து அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தின் பிரதியையும் ஐ.நா பிரதிநிதியிடம் கையளித்தார்.