எல்லா நாடுகளுடனும் சுமுக உறவு – இதுவே தமது வெளிவிவகாரக் கொள்கை என்கிறார் மைத்திரி
தமது அரசாங்கம் தொடர்ந்தும் அணிசேரா கொள்கையையே கடைப்பிடிக்கும் என்றும், எல்லா நாடுகளுடனும், சுமுகமாக உறவுகளைப் பேணும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற மூன்று வெளிநாட்டுத் தூதுவர்களின் நியமனங்களை ஏற்றுக் கொள்ளும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவின் தூதுவர் யி ஜியான்லியாங், தென்கொரியத் தூதுவர் கீ யொங், கானாவின் தூதுவர் சாமுவெல் பன்யின் யல்லி ஆகியோரின் நியமனங்களையே சிறிலங்கா அதிபர் இன்று பெற்றுக் கொண்டார்.
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு உதவுவதாக, இந்த மூன்று நாடுகளும், வாக்குறுதி அளித்துள்ளன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், “எல்லா நாடுகளுடனும்,நட்புறவை வைத்துக் கொள்ள எமது முன்னேற்றத்துக்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு மற்றைய நாடுகளின் ஒத்துழைப்புகள் தேவை.
எமது தொழில்துறையில், விவசாயத்துறையில், முதலீடுகளை வரவேற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சீனாவுடன் நல்லுறவு தேவை என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
அதற்கு சீனத் தூதுவர், சிறிலங்காவின் அபிவிருத்திக்கு சீனா முழுமையபன ஆதரவை வழங்கும் என்று உறுதியளித்தார்.