சிறிலங்கா அதிபர் புத்தகயவில் வழிபாடு- இன்று காலை நாடு திரும்புவார்
நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று புத்தகயாவுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பிகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவில் உள்ள 2500 ஆண்டுகள் பழைமையான மகாபோதி மரத்தடியில் சுமார் 15 நிமிடங்கள் விழிபாட்டில் ஈடுபட்டார்.
மைத்திரிபால சிறிசேனவுடன் அவரது மனைவி உள்ளிட்ட 24 பேர் புத்தகயாவுக்குச் சென்றிருந்தனர்.
அங்கு சுமார் ஒரு மணிநேரம் வழிபாடுகளை செய்த அவர், பின்னர், அங்குள்ள பௌத்த துறவிகளுடன் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடினார்.
இதனை முன்னிட்டு புத்தகயவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
புத்தகயவில் வழிபாடுகளை முடித்துக் கொண்ட சிறிலங்கா அதிபர், நேற்றுமாலை சிறப்பு விமானத்தில், திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
ரேனிகுண்டா விமான நிலையத்தில் அவரை, மாநில வனவள மற்றும் சுற்றாடல்துறை அமைச்சர் போஜல கோபாலகிருஸ்ண ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் சித்தார்த் ஜெயின், மற்றும் காவல்துறை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றனர்.
அங்கிருந்து அவர் வீதிவழியாக திருப்பதிக்குச் சென்றார்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் வழிபாடு செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
திருப்பதியில் வழிபாடுகளை முடித்த பின்னர், கேரள மாநிலத்தில் உள்ள கொச்சின் விமான நிலையத்துக்குச் செல்லும், மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து சிறிலங்கன் விமானத்தில் கொழும்பு புறப்படுவார்.