மகிந்தவின் வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் மங்கள – ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு அழைப்பு
சிறிலங்காவுக்கு வருகை மருமாறு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக அழைப்பு விடுக்கவுள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனை, சிறிலங்காவுக்கு வருகை தருமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று அதிகாரபூர்வ அழைப்பை அனுப்பி வைக்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பயணம் தொடர்பான ஒழுங்குகள் ஏதும் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜப்பானிய பிரதமர் சின்சோ அபே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது, முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு ஒரு ஆண்டுக்குள் அழைப்பு விடுப்பதாக சிறிலங்கா இணங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.