ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஆட்டம் காணும் புதிய அரசு
சிறிலங்காவின் சட்டம் ஒழுங்கு மற்றும் அனர்த்த முகாமைத்துவ, கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், 114 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல்களை தடுக்கத் தவறிய குற்றச்சாட்டை முன்வைத்து, எதிரணியினர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
114 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றச் செயலாளரிடம் இன்று மாலை கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பெரும்பான்மையை விடவும் அதிகமாக- 114 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளதால், அமைச்சர் ஜோன் அமரதுங்க பதவியிழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாதம் ஆக முன்னர், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் நிலை ஏற்படுவது, மைத்திரிபால சிறிசேன- ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை நெருக்கடிக்குள் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.