மேலும்

ஏழரை இலட்சம் டொலருக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டு ஆலோசகரை நீக்கியது புதிய அரசு

மோசமான நடத்தையால் அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட டொமினிக்  ஸ்டர்ரஸ் கானை சிறிலங்காவின் புதிய அரசாங்கம், வெளிநாட்டு முதலீட்டு ஆலோசகர் பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவராகப் பணியாற்றிய போது, வொசிங்டன், பாரிஸ், பிரசெல்ஸ் நகரங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார் டொமினிக்  ஸ்டர்ரஸ் கான்.

இவரை முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசகராகப் பதவிக்கு அமர்த்தியிருந்தது.

இதற்கென அவருக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் டொலரை மகிந்த அரசாங்கம் ஆலோசனைக் கட்டணமாகவும் செலுத்தியிருந்தது.

ஆனால், புதிய அரசாங்கம் அவரது சேவையை நிறுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று அறிவித்துள்ளார்.

அவரது சேவை தேவையற்றது என்று புதிய அரசாங்கம் உணர்வதாகவும், இதனைத் தாமே கவனித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவருக்கான கட்டணம் ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டு விட்டது.

எனினும், இவர் எத்தகைய பணியை ஆற்றினார், அதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் பெறப்பட்டதா என்பது குறித்து இன்னமும் தெளிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *