வாக்களிப்பு தெற்கில் படுவேகம்; வடக்கு, கிழக்கில் மந்தம்
சிறிலங்காவில் நடந்து வரும் அதிபர் தேர்தலில் நண்பகல் வரை நாட்டின் பல இடங்களில் வாக்களிப்பு வீதம் 50 வீதத்தை தாண்டி விட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வடக்கு, கிழக்கில் வாக்களிப்பு மந்தநிலையிலேயே இருந்தாலும், நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் உச்சக்கட்ட விறுவிறுப்பைக் காண முடிவதாக தெரிவிக்கப்படுகிறது.
நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொழும்பு மாவட்டத்தில் 52 வீதமும், கண்டி மாவட்டத்தில் 60 வீதமும், பொலன்னறுவ மாவட்டத்தில் 55 வீதமும், மாத்தளை மாவட்டத்தில் 55 வீதமும், நுவரெலிய மாவட்டத்தில் 58 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அம்பாந்தோட்டையில் 35 வீதமும், கம்பகாவில் 48 வீதமும், அனுராதபுரவில் 30 வீதமும், மாத்தறையில் 45 வீதமும், களுத்துறையில் 50 வீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேவேளை யாழ். மாவட்டத்தில் நண்பகல் 12.30 மணியளவில் 52 வீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் நண்பகல் வரை 30 வீதத்துக்கும் உட்பட்ட வாக்குகளே பதிவாகியுள்ளன.
முல்லைத்தீவில் 20 வீத வாக்குகள் கூடப் பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முற்பகலில் பெருமளவில் வன்முறைகள் இடம்பெறாததால், பிற்பகலில் வாக்களிப்பு வீதம் அதிகளவில் இருக்கும் என்று தேர்தல் திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
வாக்களிப்பு முடிவடைவதற்கு இன்னமும், சுமார் ஒன்றரை மணிநேரமே இருப்பது குறிப்பிடத்தக்கது.