வவுனியாவிலும் வாக்களிப்பு நிலையம் அருகே கைக்குண்டு தாக்குதல்
வவுனியாவிலும் வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகே இன்று பிற்பகல் கைக்குண்டுத் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாவற்குடா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள, வாக்களிப்பு நிலையத்துக்குப் பின்புறமாக உள்ள மைதானத்திலேயே கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.25 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்தச் சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை வடமராட்சி, அல்வாயில் வாக்களிப்பு நிலையம் ஒன்றுக்கு அருகிலும் இதுபோன்று கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
வாக்காளர்களைப் பயமுறுத்தி, வாக்களிப்பதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
வவுனியா மாவட்டத்தில், வாக்களிக்கச் சென்றவர்களை உந்துருளியில் வந்த மர்மநபர்கள் மிரட்டி வாக்களிக்க விடாமல் தடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.