கொழும்பில் ஐதேக தலைமையகம் மீது தாக்குதல் – பதற்றம்
கொழும்பில் ஐதேக தலைமையகமான சிறிகோத்தாவுக்கு வெளியே, ஆளும்கட்சி ஆதரவாளர்களின் குழுவொன்று ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டதையடுத்து, அங்கு வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.
ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட உடன்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆளும்கட்சி ஆதரவாளர்கள், வன்முறைகளில் ஈடுபட்டனர்.
சிறிகோத்தா மீது பொல்லுகளைக் கொண்டும், கற்களை வீசியும் தாக்குதலில் ஈடுபட்டவர்களை, ஐதேக ஆதரவாளர்களும் பதிலுக்குத் தாக்கியுள்ளனர்.
இதனால், அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியுள்ளது. இந்த வன்முறைகளில் பலர் காயமடைந்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதலின் போது சிறிகோத்தா முன்பிருந்த புத்தரின் சிலையும் தாக்குதலில் சேதமாக்கப்பட்டுள்ளது.
மேலதிக காவல்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மோதல்களை அடுத்து கோட்டே பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.