மைத்திரியுடன் இணைந்தது ரிசாத் பதியுதீன் கட்சி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகித்த, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் ரிசாத் பதியுதீன் இந்த முடிவை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
அண்மையில் நியமிக்கப்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், தம்முடன், 07 மாகாணசபை உறுப்பினர்களும், 69 உள்ளூராட்சிசபை உறுப்பினர்களும், எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாக ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
தமது சமூகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.