மேலும்

மகிந்த அரசில் இருந்து வெளியேறுகிறது முஸ்லிம் காங்கிரஸ்? – 48 மணிநேரத்தில் அறிவிப்பு

rauff-hakeemசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடுத்த 48 மணிநேரத்தில், மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மூத்த பேச்சாளர் ஒருவர் தகவல் வெளியிடுகையில், தமது கட்சி வரும் அதிபர் தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஏற்கனவே முடிவு செய்து விட்டதாக கூறியுள்ளார்.

எனினும், இரண்டு அல்லது மூன்று பேர் சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், அவர்கள் கட்சியை விட்டு விலகுவது குறித்து தாமே முடிவெடுக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஒன்றுபட்டு முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகும் தமது முடிவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கவுள்ள, முஸ்லிம் காங்கிரஸ், எதிரணியின்  தேர்தல் பரப்புரையில் அதிகாரபூர்வமாக இறங்கவுள்ளது.

முன்னதாக, முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளை விட்டு விலகவுள்ளனர்.

அதேவேளை, இரண்டு அல்லது மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தாம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ள போதிலும், அரசாங்கத்தை விட்டு விலக கட்சி முடிவெடுத்து விட்டதாக பல்வேறு தரப்புகளும் உறுதி செய்துள்ளதாகவும் ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றொரு முஸ்லிம் கட்சியான, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும், நாளை தமது முடிவை அறிவிக்கவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *