மேலும்

சிறிலங்கா அதிபர் தேர்தல் தனியொரு குடும்ப ஆட்சிக்கு முடிவுகட்டுமா?

Rajapaksa  two brothersசிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஜனவரி 08 தேர்தலில் வெற்றி பெற்றால், சிறிலங்காவானது மேலும் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதாரத்துடன் இணைந்த அதிகாரத்துவம், சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் இனவாதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாடாக மாறும்.

இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட The Wall Street Journal ஊடகத்தில் Razeen Sally எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் அதிபர் தேர்தலை முற்கூட்டி நடாத்தவுள்ளதாக அறிவித்ததானது இவர் மூன்றாவது தடவையாகவும் அதிபராகப் பதவியேற்பதை நோக்காகக் கொண்டிருந்தது. ஆனால் ஜனவரி 08 அன்று இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து எதிரணியின் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டதானது தற்போதைய அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியத்தை குறைத்துள்ளது.

ஒரு மாதத்திற்கு முன்னர் மைத்திரிபால சிறிசேன தற்போதைய மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற அமைச்சராகவும் தற்போதைய ஆளுங்கட்சியின் பொதுச் செயலராகவும் கடமையாற்றியிருந்தார். ஆனால் கடந்த பத்தாண்டாக சிறிலங்காவை ராஜபக்ச ஆட்சி செய்துவரும் அரசியல் நடவடிக்கையில் மைத்திரிபால சிறிசேனவின் கட்சித் தாவலும் எதிரணியின் பொதுவேட்பாளராக இவர் அறிவிக்கப்பட்டமையும் ஒரு திடீர்த் திருப்பமாக அமைந்துள்ளது.

2009ல் தமிழ்ப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தற்போதைய சிறிலங்கா அதிபர் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்த அடிப்படையில், சிறிலங்காவானது ராஜபக்சவின் தலைமைத்துவத்தை பெரிதும் வரவேற்றுள்ளது. சிறிலங்காவில் கால் நூற்றாண்டாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், தற்போது மக்கள் அச்சமின்றி தமது நாளாந்தத்தைக் கழிக்க முடிகிறது.

வீதிகள், பாலங்கள், தொடரூந்துப் பாதைகள், மின்சக்தித் திட்டங்கள் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் நாட்டின் பெரும்பாலான பட்டிணங்கள் மேலும் அழகுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் சிறிலங்காவில் வாழும் மக்களின் நிலை அரசியல் காரணங்களால் சீர்குலைந்துள்ளது. சிறிலங்காவின் அரசியல், இனங்களுக்கிடையிலான நல்லுறவு, பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை போன்றன மிகவும் மோசமடைந்துள்ளன.

அரசியல் ரீதியாக நோக்கில், சிறிலங்காவானது தனியொரு குடும்பத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நாடாகக் காணப்படுகிறது. இது தற்போது நான்கு சகோதரர்களால் மட்டும் ஆளப்படுகிறது. அதாவது சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச இவரது இரு சகோதரர்களான கோத்தபாய மற்றும் பசில் மற்றும் அதிபரின் மகன் நாமல் ஆகிய நான்கு பேரால் ஆட்சிசெய்யப்படுகிறது. இதைவிட, ராஜபக்சவின் நெருங்கிய உறவுகள், நண்பர்கள் போன்றவர்களும் பிரதான பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்காவின் கொள்கைத் தீர்மானமானது குறித்த ஒரு சில நபர்களால் மட்டும் வரையப்படுகிறது. பொது நிர்வாகம், சட்டசபை, நீதிச் சேவை, பிரதேச சபைகள், காவற்துறை, இராணுவம் போன்றவற்றை நிர்வகிப்பவர்கள் ராஜபக்சவின் செல்வாக்கின் அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர். இதேபோன்று வர்த்தகம், ஊடகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்றனவும் ராஜபக்சவின் கையாட்களால் அச்சுறுத்தப்படுகின்றன.

மிகச்சுருக்கமாகக் கூறில், சிறிலங்காவானது தற்போது சர்வதிகாரப் போக்குள்ள ஒரு நாடாக மாறியுள்ளது. அதாவது ரஸ்யா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளை விடவும் இந்திய உபகண்ட நாடுகளை விடவும் சர்வதிகாரப் போக்குள்ள நாடாக சிறிலங்கா மாறிவருகிறது.

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து இங்கு வாழும் இனங்களுக்கிடையிலான உறவு முன்னேற்றப்படவில்லை. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம் தீவிரமடைந்திருந்தது. இவர்கள் தற்போது கட்டுமாண வசதிகள், புதிய வீடுகள்  போன்றவற்றைப் பெற்றிருந்தாலும் கூட, இங்கு போரால் ஏற்பட்ட வறுமை மற்றும் உளவியல் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படவில்லை.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இராணுவம் தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கில் இராணுவ ஆதிக்கம் அதிகரித்துள்ளது. பௌத்த பிக்குகளால் தலைமை தாங்கப்படும் பொது பல சேன என்கின்ற அமைப்பானது பள்ளிவாசல்கள், முஸ்லீம் கடைகள் மற்றும் கத்தோலிக்கத் தேவாலயங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல் நடாத்தி வருகிறது. சிறிலங்காவில் என்றுமில்லாதவாறு சிங்கள-பௌத்த இனவாதம் தீவிரமடைந்துள்ளது. இதற்கு ராஜபக்ச அரசாங்கமும் தனது ஆதரவையும் உந்துதலையும் வழங்கி வருகிறது.

அதாவது போர் முடிவடைந்ததிலிருந்து தற்போது வரை சிறிலங்காவின் பொருளாதாரமானது ஏழு சதவீதத்தை விட அதிகரித்துள்ளது. விலையேற்றம், கடன், வட்டிவீதம் போன்றன குறைந்துள்ளன. நாட்டில் தற்போது வறுமை அதிகரித்துள்ளது. இதனால் வேலையற்றோர் வீதம் அதிகரித்துள்ளது. சிறிலங்கா அரசாங்கம் தனது பொருளாதார வளர்ச்சியை பெருமிதமாகப் பேசுவதாக அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். போருக்குப் பின்னான வளர்ச்சியானது நாட்டின் உற்பத்தி வீதம் அதிகரித்ததால் ஏற்பட்டதல்ல. அதாவது அனைத்துலக நாடுகளிடமிருந்து மானியமாகவும் கடனாகவும் அதிகளவு நிதியைப் பெற்றுக் கொண்டமையே இதற்குக் காரணமாகும்.

உள்நாட்டு தொழிற்துறைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இதற்குப் பதிலாக நுண்பொருளாதாரக் கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. வர்த்தகப் பாதுகாப்பு நடைமுறைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. போட்டித்தன்மை குறைவடைந்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகள் தடைப்பட்டுள்ளன. கட்டுமாணத் திட்டங்கள் மிக அதிகளவான நிதியில் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளையில், சிறிலங்காவின் பாதுகாப்புச் செலவீனம் அதிகரித்துள்ளது. இராணுவத்தினர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாட்டில் ஜனநாயகம் வீழ்ச்சியடைவதற்கும் பொருளாதார தேசியவாதம் அதிகரிப்பதற்கேற்ப வெளியுறவுக் கோட்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மேற்குலக நாடுகளுடனான உறவுநிலை மோசமடைந்துள்ளது. இந்தியாவுடனான சிறிலங்காவின் உறவுநிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆனால் சீனா, சிறிலங்காவின் ‘முதலாவது நண்பனாக’ செல்வாக்குச் செலுத்துகிறது. சிறிலங்காவின் புதிய கட்டுமாணத் திட்டங்கள் மற்றும் ராஜபக்சவின் பெருமையைப் பாறைசாற்றும் திட்டங்களுக்கு சீனா அதிக கடன்களை வழங்குகிறது.

சிறிலங்காவின் பூகோள பொருளாதார நலன்களை அடைந்து கொள்வதற்கேற்ற வெளியுறவுக் கோட்பாட்டை ராஜபக்ச வரையறுத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றன சிறிலங்காவின் ஏற்றுமதியின் மூன்றில் இரண்டு பங்கிற்குப் பொறுப்பாக உள்ளன. சிறிலங்கா இந்தியாவுடன் பொருளாதார உறவைப் பேணுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக, தென்னிந்தியாவுக்கு அருகிலுள்ள 300 மில்லியன் மக்களைக் கொண்ட நான்கு நாடுகளுடன் சிறிலங்கா பொருளாதார உறவைக் கட்டியெழுப்ப வேண்டும்.

சிறிலங்கா அதிபர் ராஜபக்ச ஜனவரி 08 தேர்தலை வெற்றி பெற்றால், சிறிலங்காவானது மேலும் பொருளாதாரத் தேசியவாதம் மற்றும் சீனாவில் தங்கியிருக்க வேண்டிய பொருளாதாரத்துடன் இணைந்த அதிகாரத்துவம், சிங்கள-பௌத்த பேரினவாதம் மற்றும் இனவாதம் போன்றவற்றைக் கொண்ட ஒரு நாடாக மாறும்.

அதிபராகப் பதவியேற்று 100 நாட்களில் நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பேன் எனவும், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை உருவாக்குவேன் எனவும் மேல்மந்திரியைக் கொண்ட நாடாளுமன்ற முறைமையை மீண்டும் நடைமுறைப்படுத்துவேன் எனவும் காவற்துறை, நீதிச்சேவை, பொதுச் சேவை போன்ற சுயாதீன நிறுவகங்களை மீளவும் நிறுவுவேன் எனவும் திரு.சிறிசேன வாக்குறுதி வழங்கியுள்ளார். இவையெல்லாம் வரவேற்கத்தக்க மாற்றங்களாகும். சிறிலங்காவானது நம்பகமான பொது நிறுவகங்களைக் கொண்ட ஒரு நாடாகவும் சட்ட ஆட்சி மதிக்கப்படும் ஒரு நாடாகவும் மாறவேண்டிய தேவையுள்ளது. ஆனால் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் எதிரணியிலும் அதிகாரத்துவ சக்திகள் அங்கம்பெற்றுள்ளன.

எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன உறவு தொடர்பாக எவ்வித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. ஏனெனில் எதிரணியில் சிங்கள-பௌத்த இனவாதிகள் அங்கம் வகிக்கின்றனர். இதயசுத்தியுடன் கூடிய இன மீளிணக்கப்பாட்டை விரும்புவோர் இதற்காகச் சண்டையிட வேண்டியிருக்கும். வடக்கு கிழக்கு உட்பட மாகாண சபைகளுக்கு வழங்கப்படாது நீண்டகாலமாகத் தாமதிக்கப்படும் அதிகாரப் பரவலாக்கம் நாட்டின் இன மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான ஒரு தீர்வாகும்.

சிறிலங்காவில் தாராளவாதப் பொருளாதாரம் நிலைநிறுத்தப்பட வேண்டும். பொது முதலீடுகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். தனியார் துறை செயற்படுவதற்கு வழிவகுக்கப்பட வேண்டும். வர்த்தக தாராளவாதம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு உந்துதல் அளிக்கப்பட வேண்டும். பொதுத் துறை மீளவும் சீர்திருத்தப்பட வேண்டும். பாதுகாப்புச் செலவீனம் குறைக்கப்பட வேண்டும். இவையனைத்தும் சிறிலங்காவின் வெளியுறவுக் கோட்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதன் மூலம் சீரமைக்கப்பட வேண்டும். அத்துடன் சிறிலங்காவானது  மேற்குல நாடுகளுடனும் இந்தியாவுடனும் நல்லுறவைப் பேணுவதற்கான அழுத்தம் வழங்கப்பட வேண்டும்.

நடைமுறை ரீதியாக நோக்கில் சிறிலங்காவுக்கு பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் சுதந்திரம் பேணப்பட வேண்டும். ஜனவரி 08ல் இடம்பெறவுள்ள தேர்தலில் எதிரணி வெற்றி பெறுமாயின் இது சிறிலங்காவின் அரசியலில் ஏற்படக் கூடிய வரவேற்கத்தக்க திசைதிருப்பமாகக் காணப்படும். ஆனால் இது சுதந்திர சிறிலங்காவைப் பெற்றுக் கொள்வதற்கான போராட்டத்தின் ஆரம்பமாக மட்டுமே அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *