கூச்சல் எழுப்பியதால், கோபத்தில் பாதியில் நின்றது மகிந்தவின் உரை
தம்புள்ளையில் ஆளும்கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலில், நேற்றுமுன்தினம் தம்புள்ளையில் சிறிலங்கா அதிபர் உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொது மக்கள் தொடர்ச்சியாக கூச்சல் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தனர்.
இதனால், மகிந்த ராஜபக்ச கோபமடைந்து பலமுறை கூட்டத்தினரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து அமைதியாவதும் பின்னர் அவர் உரையாற்றத் தொடங்கும் போது கூச்சல் எழுப்புவதுமாக கூட்டத்தினர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால் சிறிலங்கா அதிபர், கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தால் தான் தொடர்ந்து பேச முடியாது என்றும் எச்சரித்தார்.
ஆனாலும், கூட்டத்தினர் அடங்காத நிலையில், உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்று விட்டார்.
அதேவேளை, அவ்வாறு பாதியிலேயே உரை நிறுத்தப்படவில்லை என்றும் வேறொர கூட்டத்தில் உரையாற்ற வேண்டியிருந்ததால் தான், அவசரமாக அவர் வெளியேறியதாகவும் அரசதரப்பு கூறியுள்ளது.
பெரிய வெங்காயத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி அளித்ததற்கு எதிராக சுமார் 500 விவசாயிகள் சில வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்துக்கு எதிராக தம்புள்ளையில் ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.