எதிரணிக்குப் பாய்ந்தார் ஹிருணிகா
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிறேமச்சந்திர, எதிரணியுடன் இணைந்து, பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.
இன்று மாலை, எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
“எனது தந்தை கொலை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
சிறிலங்கா அதிபர் பங்கேற்கும் உயர்மட்ட நிகழ்வுகளில் கூடப் பங்கேற்கின்றனர். இது எப்படியென்று எனக்குத் தெரியவில்லை.
அரசாங்கத்தில் இருந்து முன்னரே விலகவிருந்தேன். ஆனால் தலைமை இருக்கவில்லை.
இந்த அமைப்பு சரியான தலைமை என்று கண்டுகொண்டேன். அதையடுத்து இந்த முடிவை எடுத்தேன்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பழைய உறுப்பினர்கள் ஓரங்கட்டப்பட்டு, வெளியில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
முன்னாள் அதிபர் சந்திரிகா என்னைப் பலவந்தமாக எதிரணிக்கு இழுத்து வரவில்லை.
கவனமாக யோசனை செய்யும்படி அவர் என்னிடம் கேட்டார். நான் ஒரு பெண் என்பதால், எனது பாதுகாப்புக் குறித்து யோசிக்கும்படி கூறினார்.
ஆனால் நான் எதற்கும் பயப்படவில்லை.
மைத்திரிபால சிறிசேனவை அதிபராக்குவதற்காக எதிரணியுடன் இணைந்து கொள்ள முடிவு செய்தேன்” என்று அவர் தெரிவித்தார்.