நவீன் திசநாயக்கவும் எதிரணியுடன் இணைகிறார் – அமைச்சர் பதவியை துறந்தார்
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து, பொதுமுகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசநாயக்க தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
நேற்றிரவு தனது பதவிவிலகல் கடிதத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு அனுப்பிவிட்டதாக நவீன் திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாளை எதிர்க்கட்சித் தலைவரின் பணியகத்தில் மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, ஊடகவியலாளர் மாநாட்டில் தனது முடிவை அறிவிக்கப் போவதாக நவீன் திசநாயக்க கூறியுள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்தும், அரசாங்கத்தின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் தாம் கொள்கை ரீதியாக விலகிக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவி விலகல் முடிவுக்கு அவர் சில காரணங்களையும் முன்வைத்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தன்னால், அங்கு தேவையானதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றும், தனக்குப் போதிய நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை என்றும், நவீன் திசநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதற்காக பணியாற்றுவோருடன் தான் இணைந்து கொள்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஐதேகவின் முன்னாள் தலைவர் காமினி திசநாயக்கவின் மகனான நவீன் திசநாயக்க, ஐதேக மூத்த தலைவர்களில் ஒருவரான கரு ஜெயசூரியவின் மருமகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.