முஸ்லிம் காங்கிரசை வளைத்துப் போட்டார் மகிந்த? – அலரி மாளிகையில் சந்திப்பு
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவை உறுதிப்படுத்திக் கொள்ளும் நோக்கில், நேற்றுமாலை அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது.
அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம், ஹசன் அலி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினரை, அமைச்சர்கள் பசில் ராஜபக்ச, அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோருடன் இணைந்து சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கிழக்கு மாகாணசபை குறித்த கவலைகள் மற்றும் ஏனைய அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டம் குறித்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடம் முடிவு செய்த பின்னர், தொடர்ந்து அரசாங்கத் தரப்புக் குழுவுடன் தொடர்ந்து பேசவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.