சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை
சென்னையில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான சாகிர் ஹுசேனுக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய பாகிஸ்தானின் புலனாய்வு முகவரமைப்பான ஐஎஸ்எஸ். அதிகாரிகளால், இந்தியாவில் உளவு பார்க்கவும், நாசவேலைகளை மேற்கொள்ளவும், அனுப்பி வைக்கப்பட்டிருந்தார் சாகிர் ஹுசேன்.
கண்டியை சேர்ந்த இவர் கடந்த மே மாதம் சென்னையில் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வுப் பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, இவர் மீது சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த விசாரணையின்போது சிறிலங்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுடன் இணைந்து இந்தியாவில் நாசவேலைகளை மேற்கொள்வதற்கு தாம் முயன்றதாக, சாகிர் ஹுசேன் நீதிபதி முன்பாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இவர் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதையடுத்து, நேற்று சிறப்பு நீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை விதித்துள்ளது.