சீன நீர்மூழ்கி விவகாரம் – மௌனத்தை உடைத்தார் சுஸ்மா சுவராஜ்
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிரான எந்தச் செயலிலும் தாம் ஈடுபடமாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம், மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில், நேற்று எழுத்து மூலம் அளித்துள்ள பதில் ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்துக்கு சீன நீர்மூழ்கிகள் வந்து சென்றது, இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இந்தப் பதிலை அளித்துள்ளார்.
“சீன நீர்மூழ்கி ஒன்று கடந்த செப்ரெம்பர் 7ம் நாள் தொடக்கம், 13ம் நாள் வரையிலும், ஒக்ரோபர் 31ம் நாள் தொடக்கம், நொவம்பர் 6ம் நாள் வரையிலும் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்றது.
எமது அயல்நாடுகளில் வெளிநாட்டு இராணுவப் பிரசன்னம் தொடர்பாக இந்திய அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்கிறது.
சீன நீர்மூழ்கியின் அண்மைய கொழும்புப் பயணம் குறித்து சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கேள்வி எழுப்பியது.
அதற்கு இந்த நீர்மூழ்கிகள் விநியோகத் தேவைகளுக்காகவே கொழும்புத் துறைமுகம் வந்ததாக சிறிலங்கா பதிலளித்துள்ளது.
அத்துடன், இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு எதிராக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம் என்றும் சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் வாக்குறுதி அளித்துள்ளது.
இந்தியாவும் சிறிலங்காவும் பலமான பலமுனை உறவுகளைக் கொண்டிருக்கின்றன.
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நலன்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் நெருக்கமான ஒத்துழைப்பைக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் பாதுகாப்பையும், இறைமையையும் பாதுகாப்பதற்கு இந்திய அரசாங்கம் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.