மேலும்

சிறிலங்காவுக்கு எதிராக வர்த்தகத் தடை – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை

parliament-ukசிறிலங்காவுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மனித உரிமைகள் குறித்த கவலைகளைத் தீர்ப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், சிறிலங்காவுக்கான வர்த்தக சலுகைகளை நிறுத்த வேண்டும் என்று முன்னணி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளனர்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வருகின்ற நிலையிலேயே, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

ஐ.நா விசாரணைக் குழுவை தமது நாட்டுக்குள் அனுமதிக்க சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மறுத்தால், சிறிலங்காவுக்கான வர்த்தக சலுகைகளை நீக்குவது குறித்து ஏனைய ஐரோப்பிய ஒன்றிய பங்காளிகளுடன், எமது அரசாங்கம் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுவின் தலைவர் றிச்சர்ட் ஒட்டாவே தெரிவித்துள்ளார்.

ஐ.நா குழுவை அனுமதிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தடைகளை விதிப்பது, உள்ளிட்ட எல்லா வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பிராந்திய நாடுகளின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு இந்தியாவின் புதிய நிர்வாகத்தின் ஆதரவைப் பெறும் வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியமே சிறிலங்காவின் பிரதான ஏற்றுமதியாளராக இருந்து வருகிறது.

ஏற்கனவே சிறிலங்காவுக்கு எதிராக சில தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், ஜிஎஸ்பி சலுகையை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *