தினமும் 15 ஆயிரம் லிட்டர் மதுபானத்தை நுகரும் யாழ். வாசிகள் – அதிர்ச்சி தரும் புள்ளிவிபரங்கள்
யாழ்.மாவட்டத்தில் மதுப்பாவனை கடுமையாக அதிகரித்திருப்பதாகவும், நாளொன்றுக்கு 15 ஆயிரம் லிட்டர் மதுபானம் நுகரப்படுவதாகவும், அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது மதுவரித் திணைக்களம்.
மதுவரித் திணைக்களத்தின் புள்ளிவிபரங்களின்படி, ஆறு இலட்சம் சனத்தொகையைக் கொண்ட யாழ்ப்பாணத்தில், கடந்த ஆண்டு 6 மில்லியன் லிட்டர் சாராயம் மற்றும் பியரும், 5 மில்லியன் லிட்டர் கள்ளும், நுகரப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் வரை, 4.2 மில்லியன் லிட்டர் பியர் மற்றும் சாராயம், விற்பனையாகியுள்ளது.
202ம் ஆண்டு. 1 மில்லியன் லிட்டராக இருந்த சாராயத்தின் நுகர்வு, 2013ம் ஆண்டு இரண்டு மடங்காகியுள்ளது.
இந்தக் காலகட்டத்தில், பியர் பாவனை, ஏழு மடங்கால் அதிகரித்து, 4 மில்லியன் லிட்டரைத் தொட்டுள்ளது.
இதே காலகட்டத்தில், கள்ளுப் பாவனை, இரண்டு மடங்காக அதிகரித்து, 5.6 மில்லியன் லிட்டரை எட்டியுள்ளது.
வடக்கு மாகாணத்தில், மது அருந்தும் முறை முற்றாகவே மாற்றமடைந்துள்ளது.
கடுமையான மதுப்பாவனை இளைஞர்கள் மத்தியில் ஒரு போக்காக மாறியுள்ளது என மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலை நீடித்தால், சமூகம் மிக மோசமான விளைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த மதுப்பாவனை அதிகரிப்புக்கு, புலம்பெயர்ந்தோரிடம் இருந்து இலகுவாக கிடைக்கும் பணமும், பெற்றோரின் கண்காணிப்புக் குறைவுமே முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறுக்குவீதிகளில் நிற்கும் வேலையற்ற இளைஞர்கள், மதுப்பாவனையை விளையாட்டாக கருத ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில், மதுபானம் அருந்துவோரில் பெரும்பாலானோர் இளைஞர்களே என்று வடமாகாண மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளர் கிறிஸ்ரி ஜோசப் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் முக்கியமான இரண்டு பாடசாலைகளின் அணிகளுக்கு இடையில் அண்மையில் நடந்த துடுப்பாட்டப் போட்டியின் போது, மதுபான நிறுவனம் ஒன்றினால், பழைய மாணவர்களுக்காக இலவசமாக சாராயம் மற்றும் பியர் கொள்கலன்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.
மதுபோதையில் இருந்த இருதரப்பினருக்கும் இடையில் பேதற்றநிலை உருவானதன் விளைவாக, ஒரு மாணவனின் தந்தை கொல்லப்பட்டார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.