புத்தர் பிறந்த லும்பினியில் சிறிலங்கா அதிபர் வழிபாடு
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, நேற்று கௌதம புத்தர் அவதரித்த லும்பினிக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.
நேற்றுக்காலை காத்மண்டு திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அங்கிருந்து நேரடியாக, சிறப்பு உலங்குவானூர்தி மூலம் சிறலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச லும்பினிக்குச் சென்றார்.
அங்கு புத்தர் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மாயாதேவி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச, அதையடுத்து அசோகர் தூணையும் வழிபட்டார்.
லும்பினிக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சென்றுள்ளது இது இரண்டாவது முறையாகும்.
இந்த வழிபாடுகளை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்ச காத்மண்டு திரும்பியுள்ளார்.
இன்று ஆரம்பமாகும் சார்க் தலைவர்களின் உச்சிமாநாட்டில் அவர் கலந்து கொள்வதுடன் இந்தியப் பிரதமர் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசவுள்ளார்.