தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு?
சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டம் ஒன்று நாளை நடைபெறவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, தமது கோரிக்கைகளைக் கருத்தில் கொள்ளும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசனை நடத்தும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியில், எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன அறிவிக்கப்பட்டிருப்பினும், இந்த விடயத்தில் முடிவெடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசரம் காட்டாது என்று தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று அதிகார ஆட்சிமுறையை ஒழிப்பது குறித்து மைத்திரிபால சிறிசேன கொடுத்துள்ள வாக்குறுதிகள் வரவேற்கத்தக்கவையாக இருந்தாலும், அவரை ஆதரிப்பதா என்பது குறித்து கட்சியே முடிவெடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயத்தில் முடிவெடுப்பதற்கு கூட்டமைப்பு அவசரம்காட்டாது என்றும், அவசரமாக கருத்துக்களை வெளியிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.