சீன கடற்படைத்தள விவகாரம் – நாடாளுமன்றத்திலும் எதிரொலிப்பு
சிறிலங்கா உள்ளிட்ட 18 நாடுகளில் சீனா கடற்படைத் தளங்களை அமைக்கவுள்ளதாக நமீபிய நாளிதழில் வெளியான செய்தி, சிறிலங்கா நாடாளுமன்றத்திலும் நேற்று எதிரொலித்தது.
அம்பாந்தோட்டையில் கடற்படைத் தளத்தை அமைப்பது தொடர்பாக சீனாவுடன் உடன்பாடு எதையும் சிறிலங்கா செய்து கொண்டுள்ளதா என்று ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா எழுப்பினார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா வந்திருந்த போது, சிறிலங்கா துறைமுக அதிகார சபையின் தலைவர் செய்து கொண்ட உடன்பாட்டு ஆவணத்தைச் சபையில் சமர்ப்பித்த அவர், அது தொடர்பாக அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டார்.
“அம்பாந்தோட்தை துறைமுகத்தின் இரண்டாவது கட்டத்தில், நான்கு இறங்குதுதுறைகளை சீனாவுக்கு வழங்க இணங்குகிறது அந்த உடன்பாடு.
இதுதொடர்பாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
இதுகுறித்து துறைமுக அதிகாரச்சபைத் தலைவரிடம் கேட்டபோது, அம்பாந்தோட்டையில் அமைக்கவுள்ள 7 இறங்குதுறைகளில் 4 இறங்குதுறைகளை வழங்குவதற்கு இணங்கியே, கடன் பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.” என்றும் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இதுகுறித்து கருத்து வெளியிட்டுள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய, அம்பாந்தோட்டையில் சீனா இரகசியமாக கடற்படைத்தளத்தை அமைக்க முடியாது.
வேண்டுமானால் எவரேனும் அங்கு சென்று அதனைப் பார்வையிட முடியும் என்று தெரிவித்துள்ளார்.