புலிகள் எரித்த சடலங்களை ஒட்டுசுட்டான் காட்டில் தேடுகிறது சிறிலங்கா காவல்துறை
சிறிலங்கா காவல்துறை ஆய்வாளர் ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தைக் கண்டுபிடிக்க தேடுதல் ஒன்றை சிறிலங்கா காவல்துறை ஆரம்பித்துள்ளது.
கல்கிசை காவல்நிலைய புலனாய்வுப் பொறுப்பதிகாரியான ஆய்வாளர் பி.ஜெயரட்ணம் உள்ளிட்ட 80 சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினர், ஒட்டுசுட்டான் காட்டுப் பகுதியில் வைத்து, விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவர்களின் சடலங்கள் பழைய ரயர்கள் போட்டு எரிக்கப்பட்டதாக, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
இந்த தகவல்களின் அடிப்படையிலேயே, அந்தச் சம்பவம் இடம்பெற்ற பகுதியைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதலை சிறிலங்கா காவல்துறை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவு ஆய்வாளரான ஜெயரட்ணம் கொழும்பில் விடுதியொன்றில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.
அவர் கடல்வழியாக விடுதலைப் புலிகளால் வன்னிக்கு கொண்டு செல்லப்பட்டு, விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு ஏற்கனவே தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.