சம்பிக்க, கம்மன்பில அமைச்சர் பதவிகளைத் துறப்பு – அரசில் இருந்து விலகியது ஹெல உறுமய
மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது. (இரண்டாம் இணைப்பு)
இதற்கமைய, தாமும், மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பிலவும், அமைச்சர் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கொழும்பில் சற்றுமுன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இனிமேல் தாம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளாக செயற்படமாட்டோம் என்றும், ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதிகளாகவே செயற்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக, ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கைகளுக்கேற்ப செயற்படப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட, வண.அத்துரலியே ரத்தன தேரர், இது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கொடுக்கப்பட்ட பி்றந்தநாள் பரிசு என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, நேற்று மாலை சுமார் 4 மணிநேரம் நடந்த கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் முடிவை, ஜாதிக ஹெல உறுமய எடுத்திருந்தது.
இந்தக் கூட்டத்தில், ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும், மேல் மாகாண அமைச்சருமான உதய கம்மன்பில பங்கேற்கவில்லை.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரும், கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், தனக்கு விரைவில் சத்திரசிகிச்சை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.