மகிந்தவின் நிபந்தனைக்கு அடிபணிய இந்தியா மறுப்பு
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களையும், உடனடியாகவும், நிபந்தனைகளின்றியும் சிறிலங்கா அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மரணதண்டனைத் தீர்ப்புக்கு எதிராக நேற்று முன்தினம் இந்தியத் தூதரகம் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் இந்தக் கருத்து நேற்று வெளியாகியுள்ளது.
முன்னதாக, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாவிட்டால், ஐந்து மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு அளிக்கத் தயார் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, தனது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பிரபா கணேசன் மூலம் இந்தியத் தூதரகத்துக்கு நிபந்தனை விதித்திருந்தார்.
இந்தநிலையிலேயே, உடனடியாகவும், நிபந்தனையின்றியும், மீனவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா நேற்று வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து பிரிஐயிடம் கருத்து வெளியிட்டுள்ள இந்திய அதிகாரி ஒருவர்,
சிறிலங்கா நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாகவும், நிபந்தனையின்றியும் விடுவிக்கவே இந்திய அரசாங்கம் எப்போதும் வலியுறுத்தி வருகிறது.அதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
நீதிமன்றத்தில் மீனவர்கள் சார்பில் தொடரப்பட்டுள்ள மேல் முறையீடு விலக்கிக் கொள்ளப்படமாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.