சீன நீர்மூழ்கிகளால் இந்தியா சினங்கொள்ளவில்லை – என்கிறது சிறிலங்கா
சிறிலங்கா கடற்பரப்பில் சீன நீர்மூழ்கிகள் நடமாடுவது தொடர்பாக, இந்தியாவுடன் சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தவில்லை என்று சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகை தொடர்பாக சிறிலங்காவிடம் இந்தியா கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட சிறிலங்கா இராணுவ உயர்மட்டத்தினர் அவசரமாக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படும் செய்திகளை நிராகரித்தார்.
கோத்தாபய ராஜபக்சவின் புதுடெல்லிப் பயணம் வழக்கமான பயண ஒழுங்கிற்கமையவே இடம்பெற்றது.
சீன நீர்மூழ்கிகள் சிறிலங்கா கடற்பரப்பைப் போருக்காகவோ, போருக்கு உதவும் நோக்கிலோ பயன்படுத்தவில்லை.
இதுகுறித்து இந்தியா கவலைகொள்ளவில்லை.
முன்னைய காலங்களுடன் ஒப்பிடும்போது இந்தியாவுடன் ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்