கட்டாரில் இருந்து திரும்பிய முன்னாள் போராளி கட்டுநாயக்கவில் கைது
கட்டாரில் இருந்து கொழும்பு திரும்பிய விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை, சேருநுவர, கல்லாறைச் சேர்ந்த சோமசுந்தரம் வசந்தகுமார் என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
இவர் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கட்டார் சென்றிருந்தார் என்றும், இவரது பெயர் தேடப்படுவோர் பட்டியலில் விமான நிலையப்பதிவேட்டில் இருந்ததால், கொழும்பு திரும்பிய போது கைது செய்யப்பட்டு தீவிரவாத விசாரணைப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுக்க முயன்றதாக கூறி, நெடுங்கேணிக் காட்டுப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, அப்பன், தேவியன் ஆகியோருடன் இவரும் இணைந்து செய்பட்டிருக்கலாம் என்றும், சிறிலங்கா அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக கூறப்படும் இவர், போர் முடிவுக்கு வந்த பின்னர், புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.