20 ஆண்டுகளுக்கு முன் போராளியாக இருந்தவர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் விடுலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரை, புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று கூறி சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.
மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தைச் சேர்ந்த, 5 பிள்ளைகளின் தந்தையான தங்கத்துரை ஜெயின்ஸ் (வயது-38) என்பவரே, சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ், தனது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தீவிரவாத தடுப்பு பிரிவினர் உறுதிச்சீட்டு ஒன்றைத் தமக்குத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர், தற்போது மேலதிக விசாரணைக்காக வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழேயே, தனது கணவரை கைது செய்துள்ளதாகவும், அவருக்கு புனர்வாழ்வு வழங்க வேண்டும் என தனது கணவரை கைது செய்த தீவிரவாத தடுப்பு பிரிவினர் தொலைபேசியில் தன்னிடம் தெரிவித்ததாகவும், அவரது மனைவி தெரிவித்தார்.
தனது கணவன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்தார் என்றும், பின்னர் அதிலிருந்து விலகி திருமணம் செய்து, இயல்பு வாழ்வில் ஈடுபட்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.