நாடாளுமன்றத் தேர்தலால் உள்ளக விசாரணை தாமதம் – மங்கள சமரவீர
சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதால், போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த உள்நாட்டு விசாரணை ஆரம்பிக்கப்படுவதில் சில மாதங்கள் தாமதம் ஏற்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
‘சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவதால், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவது – வரும் செப்ரெம்பர் மாதம் வரை தாமதமாகும்.
செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னதாக, உள்நாட்டு விசாரணைக் குழு – அதற்கான வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டு விடும்.
இந்த விசாரணைகளை அரசாங்கம் இந்த மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தது. எனினும், நாடாளுமன்றத் தேர்தலினால், இது தாமதமாகும்.
எனினும், அடுத்த ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக இது உருவாக்கப்பட்டு விடும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு விடும் என்றும் அது எப்போது நிகழும் என்பது சிறிலங்கா அதிபருக்கும், கடவுளுக்கும் மட்டுமே தெரியும் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.