மேலும்

கடைசி நிமிடம் வரை இழுபறி – ஐதேக, கூட்டமைப்பு விட்டுக் கொடுத்ததால் தீர்ந்தது

ranil-parliamentசிறிலங்காவின் 19வது திருத்தச்சட்டத்தில், அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் விடயத்திலேயே நேற்று கடைசிநேரம் வரை இழுபறி காணப்பட்டது. எனினும், பிடிவாதமாக இருந்த ஐதேகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கடைசியில் இறங்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது.

19வது திருத்தச்சட்டத்தில் 10 பேர் கொண்ட அரசியலமைப்புச் சபையை நியமிப்பது முக்கியமானதொரு விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்புச் சபையே, சுதந்திர ஆணைக்குழுக்களின் உறுப்பினர்களைப் பரிந்துரைக்கும் அதிகாரம் கொண்டதாக விளங்கும்.

அரசியலமைப்புச்சபைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கக் கூடாது என்றும், துறைசார் நிபுணர்களே அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்றும் 19வது திருத்தச்சட்டத்தின் வரைவில் கூறப்பட்டிருந்தது.

ஆனால், அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இடம்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி பிடிவாதமாக இருந்தது.

அது, கடைசி நேரம் வரை, 19வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தடையாக மாறும் ஆபத்து ஏற்பட்டிருந்தது.

இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேரடியாக இறங்கி, இருதரப்புடனும் மாறி மாறி பேச்சுக்களை நடத்தியதில், நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்க இணக்கம் காணப்பட்டது. எனினும், எத்தனை பேர் என்ற விடயத்தில் இழுபறி நிலவியது.

கடைசியாக, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்புச் சபையில் இடம்பெறுவர் என்று திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டது.

இந்த விடயத்தில், ஐதேக தரப்பு மனமின்றியே இதற்கு ஒப்புக்கொண்டது.

வாக்கெடுப்பின் முடிவில், உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐதேகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அரசியலமைப்பு சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த போதிலும், 19வது திருத்தத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சியின் ஆதரவு தேவை என்பதால், சிறுபான்மை அரசாங்கம் இந்த விவகாரத்தில் விட்டுக் கொடுக்க நேரிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *