மைத்திரி வாக்குறுதி – உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார் சோபித தேரர்
19வது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டத்தை, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் அமைப்பாளருமான கோட்டே நாகவிகாரையின் விகாராதிபதி வண.மாதுளுவாவே சோபித தேரர், கைவிட்டுள்ளார்.
19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, உறுதியளித்ததை அடுத்தே, வண.மாதுளுவாவே சோபித தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் பேச்சாளர் ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.
இன்று காலை சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில், ராஜகிரிய ஆயுர்வேத சந்தியில் இருந்து நடத்தப்பட்ட பேரணியில் சோபித தேரரும் பங்கெடுத்திருந்தார்.
அந்தப் பேரணியின் முடிவில், நாடாளுமன்றச் சுற்றுவட்டத்தில், சோபித தேரரும், வேறு சில பௌத்த குருமார் உள்ளிட்டோரும், உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்தநிலையில், 19வது திருத்தத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், தேரரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு சிறிலங்கா அதிபர் கோரியதாகவும், ரவி ஜெயவர்த்தன தெரிவித்தார்.
இதையடுத்தே, சோபித தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.