கோடரியால் வெட்டப்பட்ட மைத்திரியின் சகோதரர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்
கோடரியால் தலையில் வெட்டப்பட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர், பிரியந்த சிறிசேன ஆபத்தான நிலையில், பொலன்னறுவவில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
பொலன்னறுவவில் நேற்றிரவு, 7 மணியளவில் நண்பர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, பிரியந்த சிறிசேனவை அவரது நண்பரே தலையில் கோடரியால் தாக்கினார்.
இதனால், படுகாயமடைந்த அவர், பொலன்னறுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்தான நிலையில் உள்ள அவர் உடனடியாக ஹிங்குராகொட விமான நிலையத்தில் இருந்து உலங்கு வானூர்தி மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்ற போதிலும், அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, பிரியந்த சிறிசேனவை கோடரியால் வெட்டிய நண்பரான, கரகே லக்மல் என்பவர், பக்கமுன காவல் நிலையத்தில் நேற்றிரவு சரணடைந்துள்ளார்.