கட்சி தாவும் எம்.பிக்களின் பதவிகளை பறிக்க விரைவில் சட்டமூலம்
கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை ரத்து செய்வதற்கான சட்டமூலம் விரைவில், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும், ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்க்கட்சியில் இருந்து யாரையும் ஆளும்கட்சிக்குள் கொண்டுவர எங்களுக்கு விருப்பம் இல்லை. அதற்கான முயற்சிகளும் இடம்பெறவில்லை.
அவ்வாறு வருவதற்கு யாருக்கும் விருப்பங்கள் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சியிலிருந்து யாரையும் அரசாங்கத்திற்குள் கொண்டுவரும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
அதுமட்டுமல்லாமல், மக்களின் ஆணைக்கு எதிராக, கட்சிகளை மாற்றுபவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தை கூடிய விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளோம்.” என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
