வவுனியாவில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்
தியாக தீபம் திலீபனின் 38வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு வவுனியாவில் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் வவுனியா மாநகர சபை முன்றலில் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவுத் தூபியில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபன் நினைவுத் திடலில் இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்து, அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபன் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.