டுபாயில் மாகந்துர மதுசுடன் இராஜதந்திர கடவுச்சீட்டு உள்ளவரும் சிக்கினார்
டுபாயில் கைது செய்யப்பட்ட மாகந்துர மதுஸ் என்ற பாதாள உலக கும்பலின் முக்கிய தலைவருடன் கைது செய்யப்பட்டவர்களில், இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருப்பவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.
சிறிலங்கா அதிகாரிகளும், டுபாய் காவல்துறையும் இணைந்து, நேற்று டுபாயில் நடத்திய ஒரு திடீர் தேடுதலில் பாதாள உலக கும்பலின் முக்கிய தலைவரான மாகந்துர மதுஸ் உள்ளிட்ட பல போதைப்பொருள் கடத்தல் புள்ளிகள், பிரபல சிங்களப் பாடகர், திரைப்பட நடிகர் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வு ஒன்றின் போதே இவர்கள் சிக்கினர். இதன்போது பெருமளவு, போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக, டுபாயில் இருந்து வெளியாகும், காலிஜ் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட 25 பேரில், சிறிலங்காவின் இராஜதந்திரக் கடவுச்சீட்டை வைத்திருக்கும் ஒருவரும் அடங்கியுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் மிகவும் தேடப்படுகின்ற முக்கிய குற்றவாளியான மாகந்துர மதுசை கொழும்புக்கு நாடு கடத்துவது தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகள், டுபாய் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.