மைத்திரி தலைமையில் மீனவர்கள் விவகாரம் குறித்து விரிவான ஆலோசனை
நாளை மறுநாள் இந்தியா செல்லவுள்ள சி்றிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, மீனவர்கள் விவகாரம் தொடர்பான கருத்துக்களைக் கேட்டறிந்து கொள்வதற்காக, நேற்று அதிபர் செயலகத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு, கிழக்கு மாகாண ஆளுனர்கள், இருமாகாணங்களினதும் மீன்பிடி அமைச்சர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், கடற்படைத் தளபதி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், மீனவர்களின் பிரச்சினை குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு முக்கிய காரணமாக உள்ள இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதை பாக்கு நீரிணையில் இரு நாட்டு அரசாங்கங்களும் தடை செய்ய வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆலோசனை கூறியுள்ளார்.
இழுவைப்படகில் மீன்பிடிப்பவர்களை அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புக்களில் ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்வதற்காக அனுப்ப வேண்டும் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம், இருநாட்டு மீனவர்களும் பாக்கு நீரிணையில் தமது பாரம்பரிய கடற்தொழிலை எதுவித பாதிப்புகளும் பிரச்சினையுமின்றி மேற்கொள்ளலாம் எனவும் தான் இந்தக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இந்த யோசனையை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, வடமாகாண ஆளுனர் பாலிஹக்கார ஆகியோர் வரவேற்றதாகவும், இந்த யோசனையை குறிப்பிட்ட ஒரு காலத்திற்கு நடைமுறைப்படுத்திப் பார்க்கலாம் என வடமாகாண ஆளுனர் குறிப்பிட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார்.