நீரிழிவு நோயைத் தடுக்கும் புதிய அரிசியை அறிமுகப்படுத்துகிறது சிறிலங்கா
நீரிழிவு நோயைத் தடுக்கக் கூடிய புதிய நெல் இனத்தை சிறிலங்கா அறிமுகப்படுத்தியுள்ளது. நீரிழிவு நோய் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நிலையிலேயே, இந்த புதிய நெல் இனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய நெல் இனத்துக்கு, நிரோஜி என்று பெயரிடப்பட்டுள்ளது.
குறைந்தளவு கிளைசிமிக் அளவைக் கொண்ட சிவப்பு பாஸ்மதி வகையைச் சேர்ந்த இந்த நெல், குறைந்தளவு மாச்சத்தைக் கொண்டிருப்பதால், குருதியில் சீனியின் அளவைக் குறைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அம்பலாந்தோட்டை நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கு கடந்த 21ஆம் நாள் சென்று, இந்த புதிய நெல்லினத்தின் அறுவடையை பார்வையிட்டார்.
வணிக ரீதியாக இந்த நெல்லினத்தை பயிரிட்டு விற்பனை செய்வதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.