மைத்திரி பிக்பொக்கட் அதிபர் தான் – ஐதேக விமர்சனம்
பிக் பொக்கட் அதிபர் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, விமர்சித்துள்ள ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.மரிக்கார், மகிந்த ராஜபக்சவின் முதுகில் குத்தியது போன்று அவர் ஐதேகவின் முதுகிலும் குத்த முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 10ஆம் நாள் நடந்த மோதல்கள் தொடர்பாக, கருத்து வெளியிட்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐதேகவினரும், கூட்டு எதிரணியினரும் மாறி மாறி திருடர்கள் என்று குரல் எழுப்பினர். மக்களுக்கு திருடர்கள் யார் என்று தெரியும் என கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கொழும்பில் நேற்று நடந்த கூட்டத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார்,
“சிறிலங்கா அதிபர் எம்மை பிக்பொக்கட் காரர்கள் என்று அழைத்துள்ளார். ஆம், நாங்கள் பிக்பொக்கட் காரர்கள் தான்.
மகிந்த ராஜபக்சவின் சட்டைப் பையில் இருந்த அவரை, நாங்கள் தான் பிக்பொக்கட் அடித்து வெளியே கொண்டு வந்தோம் என்பதை, சிறிலங்கா அதிபர் மறந்து விடக் கூடாது. அவரும் ஒரு பிக்பொக்கட் அதிபர் தான்.
எமது ஆதரவுடன் அதிபரான பின்னர், அடுத்த தேசிய தேர்தல்களில் எம்முடன் இணைந்து செயற்படாமல் இருப்பதற்கு அவர் திட்டமிட்டார்” என்றும் தெரிவித்துள்ளார்.