இந்த வாரம் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு
மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணை அறிக்கை தொடர்பாக விவாதிக்க, சிறிலங்கா நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இந்தவாரம் இடம்பெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக அமைக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டதை அடுத்து, அது தொடர்பான விபரங்களை அறிக்கை ஒன்றின் மூலம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கூட்டி இந்த அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கூட்டு எதிரணி, ஜேவிபி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பன கோரியிருந்தன.
இது தொடர்பாக முடிவெடுக்க நாளை பிற்பகல் 2 மணியளவில் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று நடந்த கொழும்பில் நடந்த ஐதேகவின் 71ஆவது மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நாளை நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தை இந்த வாரம் கூட்டுவது தொடர்பாக ஒருமனதாக முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக எதிர்வரும் 23ஆம் நாளே நாடாளுமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.